மதுரையில் ஒரு நாள்
செவ்வாய் 20090818நேற்றுதான் மதுரைக்கு வந்து சேர்ந்தேன், ஒரு நாளில் பெரிசா என்னத்தை கிழிச்சிடப்போறேன். இன்னிக்கு முழுக்க சோபாவில உட்கார்ந்துகிட்டே பொழுதை ஓட்டிடணும்ங்கிறது என்னோட திட்டம். காலையில 6 மணிக்கு கரண்ட் கட் ஆனதுனால உடனே எழுந்து என்ன செய்றதுன்னு தெரியாம ஒரு வாக்கிங் போலாம்னு கிளம்பினேன். காந்திநகரிலிருந்து பெரியாஸ்பத்திரி வழியாக தேவர் சிலையைக் கடந்து 1985க்கு முன்பு நான் பிறந்து வளர்ந்த கோரிப்பாளையம் தெருக்களில் நடக்கும் போது எனக்கு புல்லரித்துவிட்டது. 20 ஆண்டுகளுக்கு பிறகு இப்பொழுதுதான் பார்க்கிறேன், எனக்கு எல்லா தெருக்களும் குறுகலாகவும் நீளம் குன்றியும் உள்ளதாகத் தோன்றியது. பிறந்து வளர்ந்த வீட்டுக்கு அருகில் நின்று கொஞ்சநேரம் பழைய ஞாபகங்களை அசைபோட்டுவிட்டு நடையைத் தொடர்ந்தேன்.
அங்கிருந்து ராஜாஜி பூங்காவிற்கு வந்தால் ஒரே அதிர்ச்சி--பூங்காவில் பலர் உடற்பயிற்சி செய்துகொண்டும், வாக்கிங் போய்க்கொண்டும், தியானித்துக்கொண்டும் இருப்பதைப் பார்த்து பரவாயில்லையே இங்கு கூட fitness பற்றி எண்ணக்கூடியவர்கள் இருக்கிறார்களே என்று நினைத்து பெருமையாக இருந்தது. அதில் ஒரு 65 வயது முதியவர் என்னைப் பார்த்து, "தம்பி, உங்களை இது நாள் வரை இங்க பார்த்ததில்லையே," என்றார். அவரோடு சில நேரம் பேசியதில் அவருக்கு 86 வயதுதான் ஆகிறது என்று தெரியவந்தது. இந்த வயதில் மங்கிபாரில் ஏதோ லிஃப்டில் போவதுபோல் அநாயசமாக மூன்று முறை கைகளாலேயே அவர் போய்வந்தது என்னை வியக்கச் செய்தது. இனி ஜிம்முக்குப் போவதற்கு சோம்பல் பட்டு எந்த சாக்கைச் சொன்னாலும் அது நொண்டிச்சாக்குதான் என்பது என் மனசாட்சிக்குத் தெரிந்துவிடுமே!
வீடுவந்து சேர்ந்தவுடன் அங்கிருந்த செய்தித்தாள்களைப் புரட்டியபோது ஏதோ ஒரு பெரிய மாற்றம் இருப்பது தெரிந்தது. எப்பொழுதும் இந்து நாளிதழும், தினமணியும் இருக்குமே, இங்கு இந்துவிற்குப் பதில் இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் எப்படிவந்தது என்று எனக்குப் புரியவில்லை. இருந்தாலும் யோகா முடித்துவிட்டு வந்த என் அப்பவிடம் கேட்டுவிட்டேன். வேகமாக பாத்ரூமிற்கு போய்க்கொண்டிருந்தவர் சட்டென்று திரும்பி என்னருகே அமர்ந்துகொண்டு ஒரு பெருமூச்சு விட்டார். எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து எங்கள் அப்பா வாராவாரம் ஆண்டிபட்டி வட்டாரத்தில் ஏதாவது ஒரு கிராமத்திற்குப் போய் இலவச மருத்துவ முகாம் நடத்திவருகிறார். போன ஞாயிற்றுக்கிழமைகூட சக்கம்பட்டிக்குச் சென்று வந்திருக்கிறார். வயது எழுவதைத் தாண்டிவிட்டதால் உடல் நலம் கருதி பொது நலத்தைக் கொஞ்சம் குறைத்துக்கொள்ளச் சொல்லவேண்டும் என்று நினைத்த என்னைப் பேசவிடவில்லை அவர். பொருமையாக ஒவ்வொரு சொல்லிலும் தெளிவுபட சொன்னார், "இந்த ஈழப் போராட்டத்தின் போது, களத்தில் நடக்கும் உண்மைகளையும், அங்கு மக்கள் படும் கொடுமையான அவஸ்தைகளையும் ப்ரின்ட் பண்ணாவிட்டால் கூட பரவாயில்லை; அப்படியே கம்ப்ளீட்டா இலங்கை இந்திய ரத்த வெறிக்கு உடந்தையா இருந்தான் இந்த இந்துப் பத்திரிக்கைகாரன். அங்க ஒன்னுமே நடக்கலைங்கிற மாதிரி எழுதி எல்லாரையும் இளிச்சவாயன் ஆக்கிட்டான். They displayed an utter lack of journalism. இவன் நியூஸ்பேப்பரை வாங்குறது நம்மள நாமே கம்மியா எடைபோடுறதுக்கு சமம். அந்தக்காலத்துல பிரிட்டிஷ்காரனை நக்கிப் பிழைச்சமாதிரி; let him go to hell." அப்பப்பா, பொது நலம் பொது நலம் என்று வாராவாரம் இன்னும் அலைகிறவரின் உள்ளத்தில் இவ்வளவு ஆழமாக இந்துவைப் பற்றிய இப்படி ஒரு கணிப்பு ஏற்பட்டிருக்கிறதென்றால், அப்பத்திரிக்கை ரொம்ப one-sided ஆக நடந்து செய்திகளுக்குப் பதிலாக, கவர்மென்ட்டின் பிரச்சாரஒலியாக செயல் பட்டிருக்குமோ என்ற ஐயம் எனக்கும் ஏற்பட்டது.
சில மணி நேரங்களுக்குப் பிறகு, Kinetic-Honda மாதிரியான ஒரு ஸ்கூட்டியை ஓட்டிக்கொண்டு எனது தங்கை (சித்தி மகள்) வந்திருக்கிறாள்போலும். அத்தை! அத்தை! என்று வீட்டிலிருந்து கவினும் இசையும் பெரும் கூச்சலும் ஆரவாரமும் மணியோசைபோல் முந்தியது. அவள் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பே, கவினும் இசையும் அவளது ஸ்கூட்டியில் போய் உட்கார்ந்து விட்டனர். இவன்களை ஒரு இரண்டு ரவுண்டு அடித்து கூட்டி வந்தபின்புதான் எனாலே அவளை சந்திக்க முடிந்தது.
ஒரு சோலியாக கிழக்கு வாசல் பக்கம் போனபோது நான் படித்த தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி (St. Mary's Higher Secondary School) வழியாக செல்ல நேர்ந்தது. உடனே செல்போனில், என்னோடு பள்ளிக்குச் சென்ற நண்பர்களின் நெம்பர்கள் அனைத்தையும் டயல் செய்துவிட்டேன். ஆறு பேரோடு பேசினாலும், அதில் அஸ்வின் தேசாய் என்னும் நண்பன் ஒருவனைத்தான் சந்திக்க முடிந்தது. மதுரையில் A & T Technologies என்று ஒரு நிறுவனம் நடத்திவருகிறான், அவனை அங்கேயே சென்று பார்த்து பழைய நினைவுகளை அசைபோட்டேன். எங்களோடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படித்த எம்.எஸ்.சுந்தர், டி.கே.சிவகுமார், ஜோசஃப் ராஜ்குமார், ஐசக் ராஜேந்திரன், இன்னொரு பாலா, வீரா, கார்திகேயன், நோபிள், சண்முகசிகாமணி, டோனி ஜோசஃப் (the T in A & T), ஸ்ரீதேவி, ராதா, மேகலை, லைஜுமால், என்று பலரின் இன்றைய சூழல் பற்றி சுவையாகப் பேசித்தீர்த்தோம். ரமேஷ் (பான்சா), நரசிம்மன் (நர்சி) இந்த இருவராலும் வரமுடியவில்லை. சில நாள் கழித்துதான் தெரியும் பான்சா வீட்டில் பலருக்கும் பன்றிக்காய்ச்சல் என்று! இப்போது அனைவரும் நலம், அன்று சந்திக்கமுடியவில்லையே என்றுதான் வருத்தம். Maybe, next time.
வீடுவந்ததும் அம்மா, "நளை ஊருக்குப் போயிட்டு வரலாமா. அங்க அண்ணன் கட்டிக்கொடுத்த ஸ்கூல் ஹெட்மாஸ்டர் இப்பதான் பேசினாங்க, ஊருக்கு வந்தா அங்க பள்ளி மாணவர்களுக்கு ப்ளஸ் டூ எவ்வளவு முக்கியம்ங்கிறதைப் பத்தி ரெண்டு வார்த்தை நீ பேசணும்னு சொன்னாங்க," என்று சாப்பிடும்போது சொன்னார்கள். சரி நாளையும் ஒரு ஃபுல் டே தான் என்று எனக்குத் தோன்றியது.
இசை கண்டிப்பாக தாயம் விளையாடவேண்டும் என்று சொன்னான். இவனுக்கு பாட்டியுடன் தாயம் விளையாடி அந்த விளையாட்டு பிடித்துவிட்டது. தாயம் விளையாடியதைவிட அதை எப்படி விளையாடவேண்டும் என்று எனக்கு இசை சொல்லிக்கொடுத்ததை என்னால் மறக்கமுடியாது. சந்தடி சாக்கில், "தாயம் is not like snakes-and-ladders, dice roll பண்ணி சும்மா move பண்ணுற game இல்லை; தாயத்துல strategy இருக்கு, so கவின் விளையாடக்கூடாது (விளையாடமுடியாது என்பதை அப்படிச் சொல்கிறான்)," என்று தனது 4 வயது தம்பியைவிட தனக்கு அதிகம் தெரியும் என்று பீற்றிக்கொண்டான். இதுல ஒன்னும் குறைச்சல் இல்லை, நாளை கிராமத்துல யாரு நல்லா சமாளிக்கிறான்னு பாக்கணும் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்.
தி. சுப்புலாபுரம், சத்திரப்பட்டி, குற்றாலம், கல்லணை, திருச்சி (மீண்டும் மதுரை) விவரங்கள் இனி ...